GCT கல்லூரி --- மலரும் நினைவுகள்
தோழனுக்கு ஒரு கடிதம் ! - Part I
*******************************************************
என் அன்புக்குரிய ப்ரீதம்,
உனது நட்பின் உன்னதத்தில் திளைத்த அந்த நாட்களை ஞாபகப்படுத்திப் பார்க்கையில், பறவைகள் ஒலி எழுப்பும் வனாந்திரத்தில், ஈரமான காலைப்பொழுது தரும் உளம் நிறை உற்சாத்தோடு, சிறு குழந்தையின் கரம் பிடித்து நடை பயிலும் உணர்வு எனக்கு !!
23 வருடங்களுக்கு முன்பு நடந்த நமது அந்த முதல் சந்திப்பு பளிச்சென்று நினைவில் நிற்கிறது. என் பெயர் இரண்டாவது தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றதால், நான் சற்று தாமதமாகத் தான் (வகுப்புகள் தொடங்கிய பின்) பொறியியற் கல்லூரியில் (GCT) சேர முடிந்தது. கல்லூரியில் சேர்வதற்கான ·பார்மாலிட்டிகளை முடித்து, எனக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைக்கு வந்து சேர மதியம் மேல் ஆகி விட்டது. விடுதியில் அவ்வளவாக ஆள் அரவமில்லை. சற்று நேரத்தில் முதலாண்டு மாணவர்கள் வகுப்புகள் முடிந்து வரத் தொடங்கினர். முதலில் வந்த சிலரிடம் நானே வலியச் சென்று என்னை அறிமுகப்படுத்தி கொண்டு அளவளாவிக் கொண்டிருந்தேன்.
சற்று நேரத்திற்கு பின், புயல் போல் அவ்விடத்திற்கு வந்த நீ, குட்டைச் சுவற்றின் மேல் ஏறி அமர்ந்து, பொதுவாக, "என்னப்பா, எதைப் பத்தி குரூப் டிஸ்கஷன் பண்ணிட்டு இருக்கீங்க ?" என்று வினவிய பின், கூட்டத்தில் புதியவனான என்னைப் பார்த்தவுடன் மலர்ச்சியோடு கையை நீட்டி, "Hi, I am Preetham from Madras, You must be from Madras, too !" என்று கூறி, நான் நீட்டிய கையைப் பற்றி குலுக்கினாய். அந்த இறுக்கமான கை குலுக்கலே, நம்மிடையே பின்னாளில் மலர்ந்த இறுக்கமான நட்புக்கு அச்சாரமாய் அமைந்தது !!!
பழகப் பழக நாம் நல்ல நண்பர்கள் ஆனோம். அப்போது ஓர் அறைக்கு இரு மாணவர்கள் என்றிருந்தனர். என்னை உன் (unofficial) ரூம்மேட் ஆக்கிக் கொள்வதற்காக, உன் ரூம்மேட் வாசுவை அறையிலிருந்து அப்புறப்படுத்த நீ எடுத்த பிரயத்தனங்களை சொல்லி மாளாது ! ஆரம்பத்திலிருந்தே உன்னைக் கண்டு சற்று மிரண்டிருந்த அவன், தன் பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு, அவனைப் போல் அமைதியாக இருந்த மாணவர்கள் தங்கியிருந்த அறையில் மூன்றாவது ஆளாக தஞ்சமடைந்தான். நான் உன் 'சக அறையர்' ஆனேன் (ஆக்கப்பட்டேன்!) !!! என் official ரூம்மேட் 'மொட்டைப்'பழனி தனிக்காட்டு ராஜா ஆனான் !!!
கல்லூரி வாழ்வின் பல சமயங்களில் வெளிப்பட்ட உன் பலவித திறமைகளைக் கண்டு வியக்காத நண்பர்களே இருக்க முடியாது. மொத்தத்தில் எங்களிடையே ஒரு சூப்பர் ஸ்டார் போல் நீ விளங்கினாய் !!! ஆங்கிலத்தில் நல்ல புலமை உனக்கிருந்தது. ஆங்கிலத்தில் சிறப்பாக கட்டுரைகள் எழுதுவாய், கவிதைகள் புனைவாய். ஆங்கிலப் பேச்சு போட்டிகளில் மடை திறந்தாற் போல் முழங்கி பல முறை பரிசுகள் வென்றிருக்கிறாய் !
படிப்பிலும் நீ கெட்டிக்காரன் தான். கேள்வி ஞானம் மிக்கவனாக நீ விளங்கியதில் எனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை ! எனக்கு நன்றாக நினைவிருக்கிறது! தேர்வு சமயங்களில், நானும் நீயும் ஒன்றாக படிப்போம். பல நேரங்களில் என்னை சத்தமாக படிக்கச் சொல்லி, மெத்தையில் கண் மூடி சயனித்தபடி நான் கூறுவதை உள்வாங்கிக் கொண்டு, சரியாக பன்னிரெண்டு அடித்தவுடன் குட்நைட் சொல்லி நீ உறங்கச் சென்று விடுவாய் !!! நானோ தொடர்ந்து காலை நான்கு மணி வரை படித்துக் கொண்டிருப்பேன். என் கடின உழைப்பின் பலனாக மொத்தத்தில் உன்னை விட மூன்று அல்லது நான்கு மதிப்பெண்கள் மட்டுமே அதிகம் பெற முடிந்தது கூட என் பாக்கியமே !!! நான் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் என்னை விட நீ தான் அதிகம் சந்தோஷப்பட்டிருக்கிறாய், நண்பா !!!
ஆங்கில இசை வீடியோக்களை பார்த்தே திறமையாக நடனம் ஆடக் கற்று, கல்லூரி கலை விழா ஒன்றில் அற்புதமாக நடனமாடி நீ பரிசு வென்றது என் நினைவில் பசுமையாக உள்ளது! விளையாட்டுகளிலும் நீ கலக்கியிருக்கிறாய், கிரிக்கெட் தவிர! ஹாக்கி, கால்பந்து, டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, தடகளம், வாலிபால் என்று பல விளையாட்டு அணிகளிலும் இடம் பெற்று உன் திறமையை காட்டியிருக்கிறாய்.
ஆனால், கிரிக்கெட் அணி கேப்டன் 'மொட்டை' ஷியாமுடன் ஒரு தடவை மல்லுக்கு நின்று, அணியில் சேர்ந்து, துவக்க ஆட்டக்காரனாக களமிரங்கி, கண்மூடித்தனமாக மட்டையை வீசி, முதல் பந்திலேயே நடு ஸ்டம்பை இழந்து பரிதாபமாக நின்றது, ஏனோ என் நினைவுக்கு வந்து தொலைக்கிறது :) அதே போல, ஷியாம், ஒரு முறை, நம் கல்லூரி சார்பில் களமிரங்கி, உடுமலைப்பேட்டை கிரிக்கெட் கிளப்புக்காக அப்போது விளையாடிக் கொண்டிருந்த ராபின் சிங்கின் (அவர் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமானவர்!) பௌலிங்கை அனாயசமாக எதிர்கொண்டு எடுத்த மின்னல் வேகச் சதத்தையும் என்னால் மறக்க முடியாது
!!!
நான் இன்று ஆங்கிலத்தில் ஓரளவு திறமையாக எழுதவும், பேசவும் செய்வதற்கு, நான் அன்று உன்னோடு பார்த்த பல ஆங்கில திரைப்படங்களும், நீ படிக்கத் தந்த புத்தகங்களும் காரணமாக அமைந்தன. உன்னிடமிருந்து, வாசிப்பனுபவம், அவைக்கஞ்சாமை, தியானம், தன்னம்பிக்கை, மனவுறுதி என்று பல நல்ல விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். எனக்கு Richard Bach, Somerset Maughm, Kahlil Gibran, Aurobindo, Ayn Rand போன்றோரை அறிமுகப்படுத்தியவனும் நீயே !
ஆனால், உன்னுடன் சேர்ந்து வாழ்வதென்பது என்னைப் போன்ற ஒரு சாதாரணனுக்கு கடினமான ஒன்றாகவே ஆரம்பத்தில் இருந்தது. ஏனெனில், 'எதையும் ஒரு முறை' செய்து பார்ப்பதும், extremes-களில் நினைத்தபோது நிலை கொண்டு வாழ்வதும் உனக்கு மட்டுமே இயல்பானவை !!! ஒரு நான்கு மாதங்கள், வகுப்புகள், உடற்பயிற்சி, தியானம், கோயில்கள், படிப்பு, நேரத்துக்கு உறக்கம் என்று யாருடனும் அதிகம் உறவாடாமல் ஒரு யோகி போல் வாழ்வாய் ! திடீரென்று ஒரு நாள் அவையனைத்தையும் புறந்தள்ளி விட்டு, பாட்டு, கூத்து, நண்பர்களுடன் அரட்டை, இரவுக் காட்சிகள், உற்சாக பானங்கள், உச்சக்கடலை என்று உல்லாச வாழ்க்கைக்கு தாவி விடுவாய் ! அவ்வாறு உன் வாழ்க்கை முறையை நீ அடிக்கடி மாற்றுவது எனக்கு போகப்போக பழகி விட்டது. ஒரு சமயத்திலும், எதையும் என் மேல் நீ திணித்ததில்லை, எதற்கும் என்னை நீ வற்புறுத்தியதுமில்லை !!!
முதலாண்டில் நாம் பயில்கையில் அடிக்கடி நடந்தேறும் 'கல்லெறி வைபவம்' உனக்கு ஞாபகம் வருகிறதா ?
என்றென்றும் அன்புடன்
பாலா
*************************************************
--- மடல் இன்னும் விரியும் !
5 மறுமொழிகள்:
GCT-யில் படித்த மக்கள் மறக்காமல் தங்கள் கருத்துக்களை (அல்லது அனுபவங்களை) கூறவும் !!!
என்ன உங்களோட படிச்ச நிறைய பேரு மொட்டயா? மொட்டை அடைமொழியோட நிறைய பேத்த ஞாபகப்டுத்திக்கிறீங்க:)
வெளிகண்ட நாதர்,
நன்றி !
//என்ன உங்களோட படிச்ச நிறைய பேரு மொட்டயா? மொட்டை அடைமொழியோட நிறைய பேத்த ஞாபகப்டுத்திக்கிறீங்க:)
//
பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இருவருமே முடி வளர்க்க விருப்பமில்லாமல், அடிக்கடி செய்து கொண்டு "மொட்டை" போல் தோற்றமளிப்பார்கள் :)
Correction to earlier comment !!!
வெளிகண்ட நாதர்,
நன்றி !
//என்ன உங்களோட படிச்ச நிறைய பேரு மொட்டயா? மொட்டை அடைமொழியோட நிறைய பேத்த ஞாபகப்டுத்திக்கிறீங்க:)
//
பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இருவருமே முடி வளர்க்க விருப்பமில்லாமல், அடிக்கடி "Close cut" செய்து கொண்டு "மொட்டை" போல் தோற்றமளிப்பார்கள் :)
Nice post. Which batch are you?
I have come across many GCTians in my life.
I have come across Chelliah of ECE and Rajkumar of Civil from Tirupur, Kavitha Prasad from ECE....
Post a Comment